மும்பை: 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்திய வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஐ. ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், ரிசர்வ் வங்கியிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து கேட்டிருந்தார். அதன்படி ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விவரத்தில், பாரத ஸ்டேட் வங்கி உள்பட 18 பொதுத்துறை வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. மேலும், அதிக அளவாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.12,013 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.