கடலூரில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: இளைஞருக்கு தர்மஅடி

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை  நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கூடலூரை சேர்ந்த முத்தமிழன் என்பவன் பள்ளியில் படித்த போதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி வேறொரு மாணவருடன் பழகி வந்த‌தால், இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட மாணவி முத்தமிழனை விட்டு விலகியதாக தெரிகிறது. மேலும் அவனுடைய போக்கு பிடிக்காமல் மாணவி தொடர்பை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழன் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்கலை கழக விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாணவி நடந்து வந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மாணவி செருப்பை காட்டி அவனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன் கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை மாணவியின் மீது வீசியுள்ளான். இந்த சம்பவத்தில் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதால் அலறி துடித்த மாணவியை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்தவர்கள் முத்தமிழனுக்கு தர்மஅடி கொடுத்தனர். இதில் காயமடைந்த முத்தமிழன் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: