சென்னை: வருமான வரி வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணையை தள்ளிவைத்துள்ளது. வருமான வரிக்கணக்கில் கடந்த 2015-16ம் ஆண்டு, முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 1.35 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டார்.