பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 12ம் தேதி வேலூரில் விசாரணை

வேலூர்: பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலத்தை இறக்கிய விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 12ம் தேதி வேலூர் வந்து விசாரணை நடத்த உள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்பன்(55). இவர் கடந்த மாதம் வாகன விபத்தில் இறந்தார். இவரது சடலத்தை உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் சடலத்தினை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றபோது, சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தின் உரிமையாளர் வழிவிட மறுத்து முள்வேலி அமைத்ததாக கூறப்பட்டது.

இதனால் பாலத்தின் மீதிருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்கி சுடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கலெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதன் பேரில், வேலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வரும் 12ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரில் விசாரணை நடத்த வேலூர் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: