சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துபாய் சென்றடைந்தார். அங்கு அவர் இன்று தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 28ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 16 நிறுவனங்கள் ₹2,800 கோடியில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சான் ஹீசே நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 19 தொழில் நிறுவனங்கள் ₹2,300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சான்பிரான்சிஸ்கோவில் முதல்வரை சந்தித்து பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர் சான்பிரான்சிஸ்கோவில் மாசில்லா எரிசக்தி உற்பத்தி நிறுவனமான ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும், மின்சாரத்தால் உற்பத்தி செய்யப்படும் கார் தொழிற்சாலையையும் பார்வையிட்டார். தொழில் நுட்பங்களையும் கேட்டறிந்தார்.