வால்மீகி அமைப்பினரின் போராட்டம் எதிரொலி: சர்ச்சைக்குரிய டிவி தொடர்களுக்கு தடை விதித்தது பஞ்சாப் அரசு

சண்டிகர்: பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் டிவி சேனல் ஒன்றில் ராம் சியா கி லக்  குஷ் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல், தவறான கருத்துக்களை கூறுவதாகவும், வரலாற்று உண்மைகளை சிதைப்பதாகவும், தங்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் வால்மீகி அமைப்பினர்  குற்றம்சாட்டினர். இந்த சீரியலுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இதில் ஜலந்தரில் நடந்த கலவர சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீரியலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. நாடு முழுவதும் இந்த சீரியல் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும்  எனவும், சீரியர் டைரக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வால்மீகி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த சீரியலை உடனடியாக தடை செய்ய முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவு பிறப்பித்தார்.  மேலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மதரீதியான பிரிவினை அல்லது மோதல்களை தூண்டும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Stories: