பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தற்போது 3 துணை முதல்வர்கள் உள்ள நிலையில், மேலும் 2 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் தற்போது கோவிந்த் மக்தப்பா கர்ஜோல், லட்சுமண் சங்கப்பா சவாடி, அஸ்வத் நாராயண் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இவர்கள் முறையே பட்டியலினத்தவர், லிங்கயாத், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது முதல்வராக உள்ள எடியூரப்பா, லிங்கயாத் சமூகத்தின் ஒரு பிரிவை சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடக பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால் கர்நாடக பாஜக, லிங்கயாத் சமூகத்தின் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மற்ற சமூகத்தினரையும் கவரும் வகையில் மேலும் 2 சமூகத்தை சேர்ந்தவர்களை துணை முதல்வர்களாக நியமிக்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.