ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் குருதி தான செயலியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் : திமுக மருத்துவ அணி தகவல்

சென்னை : திமுக மருத்துவ அணி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் குருதி கொடை வழங்கிட, திமுக மருத்துவ அணிச் சார்பில் புதிய ‘குருதி தான செயலி’ அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த செயலியை இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி தொடங்கி வைக்கிறார்.

அவசர காலத்திலும், அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ காரணங்களினால் குருதி தேவைப்படுபவர்கள், இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டால்,  அவர்களுக்கு வேண்டிய  ரத்த வகை உடனடியாக கிடைத்திட திமுக மருத்துவ அணி ஏற்பாடு செய்து தரும். இச்செயலி 24 மணி நேரமும் செயல்பட, அதற்கான வல்லுநர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். பொது மக்கள், திமுகவினர், குருதி தேவைப்படுவோர் மட்டுமல்லாமல், குருதி தானம் அளிக்க விரும்புபவர்கள், திமுக மருத்துவ அணியின் குருதி தான செயலியை பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: