பெரம்பூர்: யானைகவுனியில் உள்ள நகை பட்டறையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 61 வடமாநில சிறுவர்கள் மீட்கப்பட்டனர். சென்னை யானைகவுனி, வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் அதிகளவில் நகை கடைகள், நகை பட்டறைகள், துணிக் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள நகை பட்டறைகளில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் அதிகளவில் வேலை செய்வதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து அதிகாரிகள் வால்டாக்ஸ் சாலை, யானைகவுனி பகுதிகளில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 5 நகை பட்டறைகளில் 61 வடமாநில சிறுவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. உடனடியாக சிறுவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார் காசிமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.