228 மையங்களில் காவலர் தேர்வு...8,888 பணிக்கு 2.74 லட்சம் பேர் ஆஜர்: ஒரு மாதத்தில் ரிசல்ட்

சென்னை: 8,888 காவல் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் ேநற்று 228 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை சுமார் 2.74 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று  சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர்  பதவி என 8,826 பணியிடங்களுக்கும் இது தவிர 62 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிட்டது.

விண்ணப்பிக்க ஏப்ரல் 8ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு கொண்டு மாநிலம் முழுவதும் சுமார்  3,22,276  பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்தனர். இவர்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 934 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று சென்னையில் 13  மையங்கள் உட்பட தமிழகம்

முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மையங்களில் நடந்தது. முன்னதாக காலை 8 மணி முதலே தேர்வு மையத்தில் ேதர்வர்கள் காத்திருந்தனர். அவர்களை, 9 மணியளவில் போலீசார் தீவிர சோதனை செய்து, தேர்வு மையத்திற்குள்  அனுமதித்தனர். ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் அடையாள அட்டையை ஆய்வு செய்தனர். ேதர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர மற்ற பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கி 11.20 மணிக்கு முடிந்தது. 1 மணி 20 நிமிடங்கள் நடந்த தேர்வில் மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பொது அறிவியல் 50 கேள்விகளும், உளவியலில் 30  கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது.தேர்வு நடைபெறும் மையங்களில் அந்ததந்த மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் திடீரென தேர்வு நடைபெறும் மையங்களில் சோதனை நடத்தினர். காலை 11.20 மணிக்கு எழுத்து  தேர்வு முடிந்தது. தொடர்ந்து, தேர்வர்களிடம் இருந்து விடைத்தாள் பெறப்பட்டு, அவர்கள் தேர்வு மையத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள்  தெரிவித்தனர். இந்த தேர்வு முடிவடைந்த நிலையில் அதற்கான முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும். இதில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர்  தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 19,990 பேர் எழுதினர்: சென்னை அண்ணாசாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, கோடம்பாக்கம் மீனாட்சி பெண்கள் கல்லூரி என மாநகரம் முழுவதும் 13 மையங்களில் காவலர்களுக்கான  எழுத்து தேர்வு நடைபெற்றது. கிண்டி அண்ணாபல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வு மையத்திற்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மயிலாப்பூர் துணை கமிஷனர் ஜெயலட்சுமி உடன் இருந்தார். சென்னையில் 2,429 பெண்கள் என மொத்தம் 19,990 பேர் தேர்வு எழுதினர். கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் மட்டுமே 2,000 பெண்கள் தேர்வு எழுதினர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: