சென்னை: வடபழனி பஸ் டெப்போவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ₹2 லட்சம், அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் கடந்த மாதம் 28ம் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்தில் இருந்த மாநகர போக்குவரத்து பணியாளர்களான சென்னையை சேர்ந்த கே.சேகர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ப.பாரதி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.