சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், சர்வதேச முனையத்திற்கு அண்ணா பெயரையும் கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சூட்டினார். பயணிகளின் விமான டிக்கெட்களிலும் இந்த பெயர்களே இருந்து வந்தன. ஆனால் 2013ம் ஆண்டு ₹2,0200 கோடி செலவில் புதிய உள் நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தபோது காமராஜர், அண்ணா புகைப்படங்களை வைக்கவில்லை. அப்போதே தமிழக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து விமான டிக்கெட்டுகளில் காமராஜர், அண்ணா பெயர்கள் நீக்கப்பட்டன. உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதிக்கு டெர்மினல் 1, வருகை பகுதிக்கு டெர்மினல் 2 என்றும், சர்வதேச முனையத்தில் புறப்பாடு பகுதிக்கு டெர்மினல் 3 என்றும், வருகை பகுதிக்கு டெர்மினல் 4 என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விமான டிக்கெட்களிலும் அதுவே இடம் பெற்றன.