வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேன்விபத்தில் காயமடைந்தவருக்கு ₹12 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூரை சேர்ந்தவர் ரகுபதி. கடந்த 13.3.2016 அன்று அம்பத்தூர், ஏகாம்பரசத்திரம் அருகே, லோடு வேனை ஓட்டிக்கொண்டு சென்றிருந்தார். அப்போது அதே பாதையில் மற்றொரு லோடு வேன், வேகமாக வந்துள்ளது.அந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரகுபதி ஓட்டி வந்த வேன் மீது மோதியது. இதில் ரகுபதி பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் பலத்த காயமடைந்து வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் ரகுபதி உரிய இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி சுதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரகுபதி பலத்த காயமடைந்ததால் வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும், இதனால் மாதம் ₹20 ஆயிரம் சம்பாதித்து வந்த அவருக்கு கஷ்டமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. எனவே நீதிபதி பாதிக்கப்பட்ட ரகுபதிக்கு இன்சுரன்ஸ் நிறுவனம் ₹12 லட்சத்து 29 ஆயிரத்து 90 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: