ஐதராபாத்: ‘‘காஷ்மீரில் நிலைமை சுமூகமாக இல்லை. மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலையில்தான் அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்,’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 11 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் நகர் சென்றனர். ஆனால், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், டி.ராஜா ஐதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:காஷ்மீரில் நிலைமை சுமூகமாக இல்லை. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்பு செயல்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், நாங்கள் சோதித்து பார்த்த வரையில், தொலைபேசி எதுவும் செயல்படவில்லை. இன்டர்நெட் சேவை இல்லை. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயாராக இல்லை.