ஒரத்தநாடு: 1,330 திருக்குறளில் உள்ள எழுத்தில் கலைஞரின் உருவம் பொறித்து புத்தகமாக்கி அதனை திமுக தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற ஒரத்தநாட்டை சேர்ந்த ஓவியர், தினகரன் நாளிதழ் புகைப்படங்கள் தனக்கு வழிகாட்டியாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. ஓவியரான இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரைநூலை பல வண்ணத்தில் ஒவ்வொரு எழுத்துக்களையும் உருவாக்கி, ஒவ்வொரு எழுத்திலும், கலைஞரின் உருவத்தினை பொருத்தி, அழகிய வடிவில் உரைநூலை 13 புத்தகமாக பிரித்து, நவீன கலைநுட்பத்துடன் ஒரு அதிசய தக்க பேழையாக உருவாக்கியுள்ளார். அந்த புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார். கலைஞரின் கலைநயமிக்க உரை பேழையை பார்த்த மு.க.ஸ்டாலின் சிறப்பான முயற்சி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்று கையெழுத்திட்டு பாராட்டினார்.