99 சதவீதம் பேர் தோல்வியடைந்ததால் டெட் தேர்வு ரத்தாகுமா?: டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: 99 சதவீதம் பேர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் குறிப்பிட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்தலாமா என டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு 4 மாதங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அவசர அவசரமாக டெட் தேர்வு ஜூன் 8,9ம் தேதிகளில் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 80 ஆயிரம்  பேர் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை வேலை கிடைக்காமல் உள்ளனர். இந்நிலையில் குறிப்பிட்ட தேர்வால் வேலை கிடைக்காது, மேலும் ஒரு தேர்வை எழுத வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒப்பிடும்போது, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் உடனடியாக வேலை கிடைக்காது என்ற நிலை மாணவர்கள்  மத்தியில் ஏற்கனவே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெட் முதல் தாளுக்கு 1.62 லட்சம் பேரும், டெட் இரண்டாம் தேர்வுக்கு 3.79 லட்சம் பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

ஏற்கனவே பலர் தேர்ச்சி பெற்று பலர் காத்திருக்கும் நிலையில், மீண்டும் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை குறைக்க டிஆர்பி திட்டமிட்டது. அதற்காக வினாத்தாள் கடினமானதாக வடிவமைக்கப்பட்டது. இந்த தேர்வில் 2 தாள்களும் சேர்ந்து 5  ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்த்தது. ஆனால் முதல் தாளில் 98.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாத நிலையில், டெட் 2ம் தாள் தேர்வில் 99.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில்  குறிப்பிட்ட தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் முயற்சியாக, விடைத்தாளில் சந்தேகத்திற்கிடமான வகையில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு, பிற பிரச்னைகளால் குறிப்பிட்ட தேர்வை ரத்து  செய்துவிட்டு புதிய தேர்வை நடத்தலாமா என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: