சென்னை: ரயில்வேயில் பணிபுரிந்த 392 பேருக்கு அதாலத் மூலம் ரூ.6,67,985 ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்பவர்கள் பணிநிறைவு பெற்றதும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு பிரச்னைகள் காரணமாக பலருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதையடுத்து, அவர்களுக்கான பிரச்னைகளை தீர்த்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில், சென்ட்ரல் ரயில்வே தலைமை அலுவலகத்தில் பென்ஷன் அதாலத் என்ற பேரில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை போக்கும் வகையில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டது.