மும்பை: கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் அன்னியச் செலாவணி பரிவர்த்தனை முடிவில் டாலருடனான ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்தது. கடந்த 6 மாதங்களில் மிகவும் குறைவாக 62 பைசா குறைந்து 71.40 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில்ஏற்பட்ட குளறுபடி, ஆர்ஜெண்டினா நாட்டின் கரன்சி மதிப்பு சரிவு, பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பீதி அடைந்தனர். இதனால், தங்களது முதலீடுகலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.நேற்று காலை, அன்னியச் செலாவணி சந்தையில் பரிவர்த்தனை தொடங்கியதும் டாலருடனான ருபாய் மதிப்பு 71.00 ஆக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து 70.85 என்ற நிலையில் நிலைபெற்றது. நேற்று முன்தினம் 71.40 ஆக இருந்த ரூபாய் மதிப்பு நேற்று 55 பைசா அதிகரித்து 70.85 ஆனது. சீனாவின் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது புதிய வரியை ஆகஸ்டு 15ம் தேதி அமெரிக்கா அறிவிக்க தாமதமான நிலை, அன்னியச் செலாவணி முதலீட்டாளர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவே ரூபாய் மதிப்பு உயர காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.