தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:

கூட்டுறவுத் துறை:

* கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான குடும்ப நல நிதி ரூ. 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கும். குடும்ப நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் ரூ. 5,000 முன்பணம், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இங்கு பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கான மாற்றுத்திறனாளிப்படி ரூ. 1,000 த்திலிருந்து, ரூ.2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* பொது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கு, அவர்களது மாத சம்பளம், அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை மூலம் வழங்கப்படும்.

கால்நடை பராமரிப்புத்துறை:

* தமிழ்நாட்டில் 3,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 75 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், தலா ரூ.4 லட்சம் வீதம், ரூ. 3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* 5,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்துகளில் புதிய கால்நடை மருந்தகங்கள், தலா ரூ. 14 லட்சம் ரூபாய் வீதம் ரூ. 3.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* ஐந்து கால்நடை மருந்தகங்கள் தலா ரூ. 50 லட்சம் வீதம், ரூ. 2.50 கோடி ரூபாய் செலவில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

* இரண்டு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் பெரு மருத்துவமனைகள் தலா ரூ.1.20 கோடி ரூபாய் வீதம், ரூ. 2.40 கோடி ரூபாய் செலவில், 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை:

* திருச்சி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும்.

* உளுந்தூர் பேட்டை சண்முகம், கவிஞர் நா.காமராசு, இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், கோபால கிருட்டிணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்’’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

* வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், 36 லட்சம் ரூபாய் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும்.

* ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். இதற்கென தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.

* ‘‘தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்” பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும். இதற்கென வைப்புத் தொகையாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழ் பல்கலைக்கழகத்தில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும்.

*பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் மாணவ, மாணவியரின் வருகையை உறுதி செய்ய, கைரேகை அங்கீகார முறையின் அடிப்படையில், பயோ-மெட்ரிக் கண்காணிப்பு தொழில்நுட்பக் கருவிகள் 2 கோடியே 97 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில், அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்டு முன்பணம் ரூ. 20,000ல் இருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* பட்டியலிடப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் 14 விடுதிகளுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

* 2019-20-ம் ஆண்டில் 2 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், 2 மிகப் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் விடுதிகள் மற்றும் 2 சிறுபான்மையினர் விடுதிகள் என மொத்தம் 6 கல்லூரி விடுதிகள், 2 கோடியே 56 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக துவங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: