எச்.ஐ.வியால் பிறக்கும் குழந்தைகள் விவகாரம்,..திமுக, அமைச்சர்கள் காரசார விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி வாகை சந்திரசேகர் (திமுக) பேசியதாவது: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க அரசு முன்வருமா?அமைச்சர் சரோஜா: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை சமூக நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் 21 தத்துவள மையங்கள் மூலம் தத்தெடுப்போர் நடவடிக்கையை அரசே நடைமுறைப்படுத்தி வருகிறது.வாகை சந்திரசேகர்: பாதிக்கப்பட்ட குழந்தையை தனிமைப்படுத்தாமல் எல்லோரிடமும் பழக வாய்ப்பள்ளிக்க வேண்டும். பள்ளியிலே மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பயில்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். உடல் உறுப்புகள்  இல்லாதவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். ஆனால் கலைஞர் அவர்களுக்கு ‘‘மாற்றுத்திறனாளி’’ என்று பெயர் வைத்தார். அவ்வளவு பேருக்கும் புத்துணர்ச்சி வந்து, உத்வேகம் அடைந்து சாதனை படைத்தனர். அதேபோல இரு பாலினத்தவரை ‘‘திருநங்கை’’ என்று சொல்வதால் இன்றைக்கு அவர்கள் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதுபோல இந்த அரசு எச்.ஐ.வியால் பிறக்கின்ற அந்த குழந்தைகளுக்கும் கலைஞர் வைத்த ெபயரை போல, இந்த அரசு நல்ல பெயரை வைக்க வேண்டும்.

அமைச்சர் சரோஜா: எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளாக இருப்பின், சிறப்பு கவனம் தேவைப்படும் சிறார்களாக கருதப்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேசன் சொசைட்டி தொண்டு நிறுவனத்தில் தற்போது 71 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். வாகை சந்திரசேகர்: நாம் அவர்களுக்கு கொடுக்கும் அன்புதான் அவர்களுககு நீண்ட கால வாழ்க்கையை கொடுக்கும். அதை இந்த சமுதாயம் செய்திட மனித நேய விழிப்புணர்வை  இந்த அரசு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அமைச்சர் சரோஜா:  10 கோடி ஒதுக்கி அந்த குழந்தைகளுடைய மருத்துவம், கல்வி, உணவு மற்றும் உயர் கல்வி போன்ற அனைத்து திட்டத்தையும் மக்கள் நல்வாழ்வு துறையோடு, சமூக நலத்துறையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அமைச்சர்  விஜயபாஸ்கர்: தமிழகத்தில் இனிமேல் தாய்க்கு அந்த தொற்று இருந்தால் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அந்த தொற்று இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறோம். நோய்க்கு அருமையான மருந்து உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: