சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி வாகை சந்திரசேகர் (திமுக) பேசியதாவது: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க அரசு முன்வருமா?அமைச்சர் சரோஜா: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை சமூக நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் 21 தத்துவள மையங்கள் மூலம் தத்தெடுப்போர் நடவடிக்கையை அரசே நடைமுறைப்படுத்தி வருகிறது.வாகை சந்திரசேகர்: பாதிக்கப்பட்ட குழந்தையை தனிமைப்படுத்தாமல் எல்லோரிடமும் பழக வாய்ப்பள்ளிக்க வேண்டும். பள்ளியிலே மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பயில்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். உடல் உறுப்புகள் இல்லாதவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். ஆனால் கலைஞர் அவர்களுக்கு ‘‘மாற்றுத்திறனாளி’’ என்று பெயர் வைத்தார். அவ்வளவு பேருக்கும் புத்துணர்ச்சி வந்து, உத்வேகம் அடைந்து சாதனை படைத்தனர். அதேபோல இரு பாலினத்தவரை ‘‘திருநங்கை’’ என்று சொல்வதால் இன்றைக்கு அவர்கள் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதுபோல இந்த அரசு எச்.ஐ.வியால் பிறக்கின்ற அந்த குழந்தைகளுக்கும் கலைஞர் வைத்த ெபயரை போல, இந்த அரசு நல்ல பெயரை வைக்க வேண்டும்.