5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களின் விவசாய கடன் தள்ளுபடி இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் கடனையும் ரத்து செய்ய முடியாது என தமிழக அரசு தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், “5 ஏக்கருக்குள்ளாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் மற்றும் நகை கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், “விவசாயிகளை சிறு,குறு என பிரித்து பார்க்கக்கூடாது. தமிழக அரசின் இந்த அரசாணையால் ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பாதிப்படைவார்கள். ஏனெனில், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதமாக ஒட்டுமொத்தமாக கடன்களை ரத்து செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “தமிழக அரசு விவசாயிகளை சிறு குறு என்று பாகுபடுத்தாமல் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை விரிவுபடுத்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து ஏற்கனவே விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டு விட்டது.

வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக்குப்தா ஆகியோர் அமர்வில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் விவகாரத்தில் மாநிலத்தின் அரசாணை தொடர்பாக விவசாயிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு 2 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிடப்பட்டது.கடந்த ஓராண்டாக நிலுவையில் இருந்த மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு வாதத்தில், “மாநிலத்தில் ஏற்கனவே 2.5 முதல் 5 ஏக்கர் வரை மட்டும் நிலம் வைத்துள்ள அதாவது சிறு குறு விவசாயிகளின் கடனான ரூ.5 ஆயிரத்து 780 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 1,980 கோடியை மேலும் தள்ளுபடி செய்வது என்பது அரசுக்கு கூடுதல் சுமையாகும். அதனால் ஒட்டுமொத்த விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது என்பது முடியாது. அதற்கான சாத்தியமும் கிடையாது.  இந்த விவகாரம் அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது’’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து, “தமிழகத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை எப்படி தள்ளுபடி செய்தீர்கள்? அதுகுறித்து அமைச்சரவையில் ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதா? அதேபோல் 2.5 முதல் 5 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகளின் கடன்கள் மட்டும் தள்ளுபடி என ரகம் பிரித்தது எப்படி?  என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து மாநில அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விவசாயிகளை பிரித்து பார்ப்பதா?

விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்னு கூறியதாவது: பெரு விவசாயிகளுக்கு சலுகை வழங்குவதில் பாரபட்சத்தை காட்டக்கூடாது என வழக்கு தொடுத்திருந்தேன்.வழக்கு விசாரணை நேற்று 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வந்தது. விசாரணையில் விவசாயிகளை எந்த அடிப்படையில் அரசு பிரித்து சலுகை வழங்குகிறது. இதுபோன்ற முடிவு சட்டசபையை கூட்டி முடிவு எடுக்கப்பட்டதா அல்லது மந்திரி சபையில் முடிவு செய்யப்பட்டதா அல்லது முதல்வரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் முடிவு எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பி உள்ளனர். நீதியரசர்கள் இந்த வழக்கிற்கு நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: