புதுடெல்லி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதற்கான செயல் திட்டம் வகுக்க மத்திய அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நீக்கப்பட்டுள்ளார். அமித்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். அவரே இந்த குழுவுக்கும் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான செயல் திட்டம் வகுக்கும் பணியை இந்த அமைச்சரவை குழு மேற்கொள்ளும். இந்த குழுவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை குழு இதற்கு முன்பு கடந்த 2017 ஜூனில் நியமிக்கப்பட்டது. அதில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த குழுவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தலைவராக இருந்தார். மற்ற நான்கு பேர், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, எரிசக்தி மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல், சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.