சுதந்திர தின விழா அலங்கரிப்பு பணியில் விபரீதம் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில், வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர், 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் பயணம் செய்ய வரும் பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வருபவர்கள், ஓய்வெடுப்பதற்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட நிழற்குடைகள் உள்ளன. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால், விமான நிலையத்தை அலங்கரிக்கும் பணிகள், தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக உள்நாட்டு முனையத்தில் உள்ள 3 நிழற்குடைகள், சர்வதேச முனையத்தில் உள்ள 6 நிழற்குடைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி, வண்ணம் பூசுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளனஅந்த பணிகளை, விமான நிலையத்தில் உள்ள தனியார் ஒப்பந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

நேற்று பல்லாவரத்தை சேர்ந்த மணிகண்டன் (31) உள்பட ஊழியர்கள் சிலர், பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை சுமார் 5.15 மணியளவில், மணிகண்டன் இரும்பாலான ராட்சத ஏணி மூலம், சுமார் 30 அடி உயரத்தில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர், திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், அவரை மீட்டு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்து சென்னை விமான நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள், தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது இல்லை. இதனால், மணிகண்டன் இறந்தார். இதற்கு விமான நிலைய அதிகாரிகளே பொறுப்பு. விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இறந்த மணிகண்டன் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூறினர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: