டிஎஸ்பி கொடுத்த புகார் விவகாரம் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிய கோரி மனு: சிபிசிஐடி அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு எதிராக அதே பிரிவைச் சேர்ந்த சஸ்பெண்டான டிஎஸ்பி கொடுத்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காதர் பாஷா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:   பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி தீனதயாளன். இவரை இந்த வழக்கிலிருந்து  தப்பிக்க வைப்பதற்காக கடந்த 2005ல் இவர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  அதிகாரி பொன்மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்யவில்லை. தீனதயாளனுடன் கூட்டு சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி என்னை பழிவாங்கும் நோக்கில் பொன்மாணிக்கவேல் என்மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த வழக்கில்  ஜாமீனில் விடுதலையான என்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.

 உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் அவர் தவறாக பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து, பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும், சிபிசிஐடிக்கும் புகார் மனு அளித்தேன்.   ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது புகார் மனு மீது  வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: