இயக்குனர், செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி ஜூலை 10 முதல் தொடர் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

சென்னை:மாற்றுத்திறனுடையார் சங்கங்களின் கூட்டு இயக்கத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் நிர்வாகிகள் சென்னையில் நேற்று கூறியதாவது:  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தர வேண்டியது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கடமை. ஆனால் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் மகேஷ்வரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயகுமார் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரை சந்திக்க சென்றால் பார்க்க அனுமதிப்பதில்லை. அதற்கு பதில் கோரிக்கை மனுவுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் விரட்ட போலீசை அழைக்கின்றனர்.

அதனால் தமிழக அரசு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர், செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர், செயலாளரை மாற்ற வேண்டும். இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஜூலை 10ம் தேதி முதல் தொடர் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் கூறினர்.

Related Stories: