சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பேனர்கள் அகற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் வழங்க கோரி தமிழக அரசு சார்பில் நேரம் கோரப்பட்டது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சாதாரண அப்பாவி மக்கள் தவறு செய்தால் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசு தண்டனை பெற்றுக்கொடுக்கிறது. அதே தவறை அரசியல்வாதிகள் செய்தால் மட்டும் அரசு கால அவகாசம் கேட்பது ஏன்? என கேள்வி எழுப்பி, பேனர் விவகாரத்தில், அரசின் செயல்பாடுகளால் நாங்கள் சோர்வடைந்து விட்டோம் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.