சென்னை: கணினி ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் நடந்த குளறுபடிகள் காரணமாக நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்ட மையங்களில் 27ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் 119 மையங்களில் கணினி ஆசிரியர் தேர்வுகள் நடந்தன. அதில் 3 மையங்களில் தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வு நாளன்று எதிர்பாராத விதமாக சரிசெய்ய இயலாத அளவில், கணினித் தொழில் நுட்பக் கோளாறு ஏற்படும் நிலையில், அத்தேர்வு மையத்துக்கு மட்டும் தேர்வை ரத்து செய்து உடனடியாக மறு தேர்வு நடத்துவதற்கு வெளியிடுவது பொதுவாகவே வழக்கத்தில் உள்ளது. கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி வழித் தேர்வு மையத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தேர்வில் பங்கு கொள்ள இயலாத தேர்வர்கள், மற்றும் தேர்வில் கலந்து கொண்டு முழுமையாக நிறைவு செய்யாத தேர்வர்களுக்கு மட்டும் 27ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும்.