சென்னை: தமிழகத்தில் நிலவும் பிரச்னையை அனுப்பினால் சட்டமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் பிரச்னையை அனுப்ப மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் வருகிற ஜூலை 30ம் தேதி வரை நடக்கிறது. கூட்டத்தில் ஒவ்வொரு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.