புதுடெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அதிகளவில் தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்காவின் மதச் சுதந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சர்வதேச மதச் சுதந்திரத்தின் ஆண்டறிக்கையை (2018) அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்டது. அதில் பாகிஸ்தான், சீனா, இந்தியா உட்பட பல நாடுகளில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள் அதிகளவில் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு 3ல் ஒரு பங்கு மாநில அரசுகள் மதமாற்ற தடுப்பு சட்டத்தையும், பசுவதை தடை சட்டத்தையும் அமல்படுத்தியுள்ளன. இதன் மூலம், பசு பாதுகாவலர்கள் என்ற இந்து அமைப்பினர், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கட்டாய மதமாற்றம் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை இருப்பதால் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.