சென்னை: 2018-2021ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3 மாதம் அவகாசம் கூறியிருந்த நிலையில், ஒரு மாதம் அவகாசத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2018-21 ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என மதுரையை சேர்ந்த ஹிக்கிம் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்தது. ஆனால் 2018-2019ம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.