திருமலை: அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு தெலங்கானா இளைஞர் 6 அடி சிலை வைத்து தினந்தோறும் அபிஷேகம் செய்து வருவது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகின் சர்வாதிகார நாடாக விளங்கி வருவது அமெரிக்கா. அந்நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். டிரம்ப் வித்தியாசமான முடிவுகளை எடுப்பதுடன் தனக்கென ஒரு புதிய சிந்தனையில் பணிகளை செய்து வருகிறார். டிரம்ப்க்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு உள்ளதோ அந்த அளவிற்கு அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர். இந்தியாவில் அவருக்கு தீவிர ஆதரவாளர்கள் உள்ளது ஆச்சரியமான விஷயம்தான். தெலங்கானா மாநிலம், ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்தவர் பூஸ்சா கிருஷ்ணா. இவர் தனது வீட்டின் முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து தினந்தோறும் பூஜை செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி டிரம்ப் பிறந்த நாளையொட்டி பால் அபிஷேகம் செய்து வழிபட்டார்.