கோவை மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட 130 ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு

கோவை: கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி ஜீவா நகரில் மாநகராட்சிக்கு  சொந்தமான 60 அடி ரோட்டில் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக 252 வீடுகள்  ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்பும்  கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கு வசிப்போருக்கு குடிசை  மாற்று வாரியம் சார்பில் கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு  கட்டப்பட்டு, அங்கு வீடும் ஒதுக்கப்பட்டு விட்டது.  ஆனாலும், இப்பகுதி மக்கள் அங்கு செல்ல மறுத்து, தொடர்ந்து இங்கேயே குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் 90  வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

மீதமுள்ள  வீடுகளையும் இடிக்க திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அப்பகுதியில் வசிப்பவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கோவை  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும்  போலீசார் அங்கு விரைந்தனர். 130 ஆக்கிரமிப்பு வீடுகளின் மின்இணைப்புகளை மின்வாரிய அதிகாரிகள் துணையோடு அதிரடியாக துண்டித்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Related Stories: