சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2017 -18ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர் பதவிக்கு காலியாக உள்ள 30 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி 6ம்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 8305 பேர் எழுதினர். இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், நேர்காணல் தேர்விற்கும் தற்காலிகமாக 80 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 25ம்தேதி நேர்காணல் தேர்வு நடைபெறுகிறது.