சென்னை: நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் சென்னை அடையாறில் இருக்கும் சென்னை எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எனவும், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ள பகுதி என்பதால், அங்கு தேர்தல் நடத்த அனுமதிக்கமுடியாது என மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஜூன் 23ல் எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார்.