சென்னை: சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து உரிய புலன் விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ரோட்டைச் சேர்ந்த தேன்மொழி, எழும்பூர் பெண்கள் விடுதியில் தங்கியபடி சென்னை கீழ்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர், தேன்மொழியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து விடுதி திரும்ப காத்திருந்த தேன்மொழியை, சுரேந்தர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தாடை, கை விரல்களில் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர்.