அம்பத்தூர்: அம்பத்தூர் சிடிஎச் சாலையில், மண்டல அலுவலகம் பின்புறம் அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், கடந்த 30 ஆண்டாக இயங்கி வந்தது. இங்கு குடிநீர், இருக்கைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றியும், கட்டிடம் சிலமடைந்தும் காணப்பட்டது. இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோவிற்கு சொந்தமான கட்டிடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மாற்றப்பட்டது. அங்கு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட அரசு ₹11.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அம்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.