திருமலை: ஆந்திர மாநிலத்தில் நீதிபதி ஆணைய விசாரணைக்கு பின்னரே அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளில் அரசின் திட்டங்களை விவரித்து கவர்னர் நரசிம்மன் உரையாற்றினார்.ஆந்திர மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உட்பட 175 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். நேற்று முன்தினம் சட்டப்பேரவை தலைவராக தம்மிநேனி சீதாராம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளான நேற்று அரசின் 5 ஆண்டு திட்டங்கள் குறித்து கவர்னர் நரசிம்மன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்த அரசு பணிபுரிய வேண்டும். அனைத்து அரசு ஒப்பந்தங்களும் நீதிபதி ஆணையத்தின் முன்பு விசாரணை செய்த பிறகு வழங்கப்படும். மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதில் இந்த அரசு கடமைப்பட்டுள்ளது. நவரத்தினா திட்டத்தில் உள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இந்த அரசின் லட்சியம்.