கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சுயேச்சைகள் சங்கர், நாகேஷ் அமைச்சர்களாக பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்எல்ஏ.க்களான சங்கர், நாகேஷ் அமைச்சர்களாக பதவியேற்றனர். கர்நாடகாவில் முதல்வர்  குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடக்கிறது. இருகட்சிகளையும் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்களை இழுத்து, ஆட்சியை கவிழ்க்க பாஜ முயன்று வருகிறது. இந்த கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சை எம்எல்ஏ.க்களான சங்கர், நாகேஷ் ஆகியோருக்கும் பாஜ வலை விரித்தது. இதையடுத்து, ஆட்சியை காப்பாற்றுவதற்காக சுயேச்சை, அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, கூட்டணி அமைச்சரவை நேற்று விரிவுப்படுத்தப்பட்டது. ஆளுநர்  மாளிகையில் பகல் ஒரு மணிக்கு நடந்த விழாவில், ராணிபென்னூரு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ  சங்கருக்கும், முல்பாகல் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நாகேசுக்கும் ஆளுநர் விஆர் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுக்கு முறையே நகர வளர்ச்சி துறை, தொடக்க கல்வித்துறைகள்  வழங்கப்படும் என எதிர்பார்க்கிறது. சங்கர்  பதவியேற்கும் முன்பாக, காங்கிரசில் இணைவதாக சித்தராமையாவிடம் கடிதம்  அளித்தார். இதன்மூலம், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பலம் 80 ஆக உயர்ந்துள்ளது.

ஆபத்து இல்லை

காங்., - மஜத கூட்டணியின் தற்போதைய பலம் 119. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பலம் 112. எனவே, கூட்டணி அரசுக்கு இப்போதைக்கு  எந்த பிரச்னையும் கிடையாது.

Related Stories: