திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா நாளை துவங்கி 3 நாள் நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும், பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி நடைபெற்ற நிலையில் தெப்ப திருவிழா நாளை(14ம் தேதி) துவங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட குளத்தில் பல வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பம் இரவையும் பகலாக்கும் வகையில் குளத்தை சுற்றி வருவது பக்தர்களுக்கு கண்கொள்ள காட்சியாக இருக்கும்.