பள்ளி மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்த கும்பல்: அரசு மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ஒரு கும்பல் மொபைல் போனில் படம் பிடிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இயங்கி வருகிறது கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் கிட்டத்தட்ட 1300கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சுற்றுசுவர் இல்லாததால் கழிவறைக்கு செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது பெற்றோர்கள் குற்றச்சாட்டு ஆகும்.

இந்நிலையில் மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது முகமூடி அணிந்த 4 பேர் ஆபாச புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் கூச்சலிட்ட மாணவியை கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த மாணவி அங்கேயே மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகே உள்ள சகமாணவிகள் ஆசிரியருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.  இந்த தகவல் கேட்டு கொதிப்படைந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகை இட்டனர். பள்ளிக்கூடத்துக்கு சுற்றுசுவர் எழுப்புவதோடு கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர். மேலும் மாணவிகளை சிலர் தொந்தரவு செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: