ஈரோடு: ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் இயற்கை வேளாண்மை மூலம் கரும்பு, சின்ன வெங்காயம், உளுந்து ஆகியவற்றை ஒரே நேரத்தில் பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். மாமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவருக்கு செங்கோடம்பாளையம் பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வீரிய பயிர் ரகங்களை விதைத்து அவற்றுக்கு செயற்கை உரம், ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளித்து இருமடங்கு லாபம் பெறலாம் என்ற வழக்கமான சிந்தனையில் இருந்து விலகி நிற்கிறார் தங்கவேலு. மேலும் பாரம்பரிய பயிர் வகைகள் அவற்றுக்கு இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்து அதிலும் லாபம் ஈட்டலாம் என்பதை அவர் நிரூபித்து வருகிறார். 2 ஏக்கர் நிலத்தில் வழக்கத்திற்கு மாறாக 8க்கு 8 அடி இடைவெளி விட்டு பாரம்பரிய கரும்பு பயிரை பயிரிட்டுள்ளார். அவற்றில் ஊடு பயிராக சின்ன வெங்காயம் மற்றும் உளுந்தை பயிரிட்டுள்ளார்.