சென்னை: ஆன்லைனில் பதிவை ஏற்க மறுப்பதால் சங்கங்கள் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக பதிவுத்துறை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, விளை நிலம், திருமண பதிவு மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மூலம் சீட்டு மற்றும் சங்கங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே அனைத்து பதிவுகளும் பதிவு செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் பத்திரப்பதிவில் சில இடர்பாடுகள் இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் பதிவில் கொண்டு வந்த மாற்றம் காரணமாக பத்திரப்பதிவு வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக, 18 ஆயிரம் பேர் வரை ஒரு நாளில் பத்திரம் பதிவு செய்ய முடியும். இருப்பினும் அவ்வப்போது சர்வர் பிரச்னை காரணமாக பத்திரப்பதிவில் சிக்கல் ஏற்பட்டு வருவதை தவிர்க்க முடியாத நிலை தான் உள்ளது.