பெங்களூரு: மத்தியில் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த எம்பிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்காமல் வஞ்சித்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிருப்தி வெளிப்படுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலில் துமகூருவில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வியடைந்ததற்கு நான் தான் காரணம் என்று சிலர் கூறி வருகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. துமகூருவில் கவுடா தோல்விக்கு நான் காரணமாக இருந்தால், எனது சொந்த மாவட்டமான மைசூரு தொகுதியில் போட்டியிட்ட விஜயசங்கர் தோல்விக்கு யார் காரணமாக இருக்க முடியும்? தேர்தல் தோல்வி என்பது அவரவரின் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்தது. ஒட்டு மொத்தமாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்பதை நாம் ஒப்புகொள்ள வேண்டும். அதை விட்டு விமர்சனம் செய்வது சரியல்ல.