சென்னை: தமிழக அரசை மிரட்டி திட்டத்தை நிறைவேற்றலாம் என கனவு காண்கிறதா பாஜக? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்புயுள்ளார். இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி உடனே கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும் என கூறினார். தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக்கலப்பிடத்தை யார் செலுத்த முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது எனவும் தெரிவித்தார். இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீசி மும்மொழி திட்டத்தை கொண்டுவர நினைக்கக் கூடாது என கூறினார். புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும், மொழிவாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும்,ப்ரீ ஸ்கூல் முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி என்ற விபரீதமாக நாட்டைப் பிளவுபடுத்தும் பரிந்துரையை புதிய கல்விக் கொள்கைவகுக்கும் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.