வாடிக்கையாளர்கள் போல் மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்திமுனையில் பெண் ஊழியரிடம் நகை, பணம் பறிப்பு

* சிக்கிய கொலை குற்றவாளிக்கு அடிஉதை  

* 4 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ‘அரோமா பியூட்டி பார்லர்’ என்ற பெயரில் மசாஜ் சென்டர் உள்ளது. இதன் மேலாளராக கார்த்திக் (35) என்பவர் உள்ளார். கீதா என்பவர் உட்பட 3 பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மசாஜ் சென்டருக்கு 5 வாலிபர்கள் வந்தனர். மசாஜ் செய்ய வேண்டும், எவ்வளவு பணம் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு மேலாளர் கார்த்திக், பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர்களில் ஒருவன் பெண் ஊழியர் கீதா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கீதா அலறினார். சத்தம் கேட்டு பெண் ஊழியர்கள் 2 பேர், மேலாளர் கார்த்திக் ஓடிவந்தனர். அவர்களை மிரட்டியபடி கீதா கழுத்தில் அணிந்து இருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டனர். மேலாளர் காத்திக்கை மிரட்டி ரூ.7 ஆயிரம் மற்றும் ஊழியர்களின் 3 செல்போன்களை பறித்து கொண்டு 5 வாலிபர்களும் தப்பினர். உடனே, கீதா மற்றும் மேலாளர் கார்த்திக் ஆகியோர், திருடன் திருடன் என் சத்தம் போட்டனர். அப்போது ஆற்காடு சாலையில் சென்ற பொதுமக்கள் தப்பி ஓடிய 5 வாலிபர்களை துரத்தினர்.

அதில் ஒரு வாலிபரை மடக்கி பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். மற்ற 4 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையனை மீட்டனர். விசாரணையில் அம்பத்தூர் புதுரை சேர்ந்த சுரேந்தர் (30) என்றும், இவன் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: