சென்னை: தனியார் பால் விலை உயர்வை அடுத்து, ஆவின் பால் விலை உயர்த்தப்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் திடீரென்று நாளை முதல் லிட்டருக்கு ₹2 உயர்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் ெதரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் இதர தனியார் பால் நிறுவனங்களும் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
அதன்படி புல்கிரீம் அரை லிட்டர் ₹27லிருந்து 28 ஆகவும் 1 லிட்டர் பால் ₹54ல் இருந்து ₹56 ஆகவும் சமன் படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ₹42ல் இருந்து ₹44 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ₹48ல் இருந்து ₹50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ₹52ல் இருந்து ₹54 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் மட்டும் திடீரென்று நாளை முதல் பால் விலையை உயர்த்தி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் தனியார் பால்களை விட ஆவின் பால் தான் நிறைய வீடுகளில் மக்கள் வாங்கி உபயோகிக்கின்றனர். அதைப் போன்று குழந்தைககளுக்கு ஆவின்பால் தான் சிறந்தது என்று நிறைய தாய்மார்கள் ஆவின் பாலை உபயோகித்து வருகின்றனர்.இருப்பினும் தனியார் பால் விலையை விட ஆவின் பால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை முதல் தனியார் பால் விலை உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆவின் பால் விலை உயர்த்தப்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.