சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி முன்னாள் காவல் ஆணையர் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு

டெல்லி: கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தனக்கு சிபிஐ அனுப்பி உள்ள சம்மனை ரத்து செய்ய ராஜீவ்குமார் கோரிக்கை வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் தலைமையில் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்பதால் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. மேலும், சி.பி.ஐ விசாரணையில், பணமுறைகேடு விவகாரம் தொடர்பான ஆவணங்களை அழித்தார் என்று குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக, அவரைக் கைது செய்வதற்கு சி.பி.ஐ முயற்சி செய்த போது, மம்தா தலைமையிலான அரசாங்கம் தடுத்தது.

மேலும் ராஜீவ் குமாருக்கு ஆதரவாகவும், சிபிஐ அமைப்பை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. அதேபோல், கைது செய்வதிலிருந்து தடைவிதிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராஜீவ் குமார். இதையடுத்து, ராஜீவ் குமாரை மே 24-ம் தேதிவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது. அப்போது, அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில், தமக்கு சிபிஐ அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்யக்கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: