டெல்லி: கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தனக்கு சிபிஐ அனுப்பி உள்ள சம்மனை ரத்து செய்ய ராஜீவ்குமார் கோரிக்கை வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் தலைமையில் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்பதால் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. மேலும், சி.பி.ஐ விசாரணையில், பணமுறைகேடு விவகாரம் தொடர்பான ஆவணங்களை அழித்தார் என்று குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக, அவரைக் கைது செய்வதற்கு சி.பி.ஐ முயற்சி செய்த போது, மம்தா தலைமையிலான அரசாங்கம் தடுத்தது.