தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் கிணறுகள் வறண்டன. இதனால் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளது. கிணற்றுப்பாசனத்தில் அதிகளவில் விவசாயப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் உள்ளன. கோடைக்கு முன்பே கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றது. இதனால் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு, விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பாக வறண்ட கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு கிணற்றை ஆழப்படுத்த குறைந்தபட்சம் 1.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவு செய்கின்றனர்.