குளச்சல்: கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடலோர பகுதியில் உள்ள சின்ன முட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த தடை வரும் ஜூன் 15ம் தேதி நள்ளிரவு முதல் நீங்குகிறது. இந்த நிலையில் மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனயம், தூத்தூர், நீரோடி உள்பட 40 கடலோர கிராமங்களில் ஜூன் 1ம் தேதி முதல் தடை தொடங்குகிறது. ஜூலை 31ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த 60 நாட்கள் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது.