சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு பயங்கரம் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் துரோகக் கும்பல் சொந்த மக்களையே நரவேட்டையாடியது. நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை கொன்று குவித்தனர். அத்தனை பெரிய பயங்கரம் நடந்த பிறகும், முதலமைச்சரான பழனிசாமி தூத்துக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடந்ததற்கும் தமக்கும் தொடர்பே இல்லாதது போல இருந்துவிட்டார். வெறியாட்டம் நிகழ்ந்து ஓராண்டாகிவிட்டது. ஆனாலும் அந்த துயரத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை. அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்படக்கூடாது என்ற கொள்கை முடிவை தமிழக அமைச்சரவையில் வைத்து உடனடியாக எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திட வேண்டும். மேலும், ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதில் தூத்துக்குடி மக்களோடு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என்ற உறுதியை முதலாமாண்டு நினைவு தினத்தில் அளிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.